சென்னை,
சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் பூட்டப்பட்டு கிடந்த 2 வீடுகளின் கதவுகளை உடைத்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், கதவுகளை உடைத்து, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வம், கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலுராஜ் ஆகிய 2 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்களை தேடி கண்டுபிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், செல்போன், ஆப்பிள் லேப்டாப் மற்றும் பித்தளை, செம்பு பூஜை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.