சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அக்கட்சியின் வெற்றியை த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருப்பதால், அதற்கான முயற்சிகளை த.வெ.க. மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் சிலர் த.வெ.க. கொடியை கட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், அண்ணா சிலையில் த.வெ.க. கொடி வைக்கப்பட்டதற்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.