தமிழக செய்திகள்

தெரு நாய்கள் எண்ணிக்கையை குறைக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை!

மேலும் 4 புதிய நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு மண்டலங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் 10 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 புதிய மையங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றாக ஆலந்தூர் மண்டலத்தில், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.8.32 கோடி மதிப்பீட்டில் புதிய நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த மையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேலும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இந்த மையம் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.