தமிழக செய்திகள்

15 நாட்களுக்குள் வாகனங்களை மீட்காவிட்டால் ஆன்லைன் ஏலம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

15 நாட்களுக்குள் வாகனங்களை மீட்காவிட்டால் ஆன்லைன் ஏல நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

717 வாகனங்கள்

சென்னை பெருநகர காவல், சென்னை திருவல்லிக்கேணி மாவட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களான (D-1, D-1X, D-2, D-2X, D-6, F-1, F-1X, F-2, F-2X, F-3X & F-4X) மற்றும் ஜே - 13 சென்னை தரமணி காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 717 எண்ணிக்கையிலான வாகனங்களை அப்புறப்படுத்தி - அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

15 நாட்களுக்குள் அணுகவும்

இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்மந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை திருவல்லிக்கேணி மாவட்டம் காவல் நிலையங்கள் மற்றும் ஜே - 13 சென்னை தரமணி காவல் நிலையங்களை செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுகவும்.

மின்னணு ஏலம்

அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னணு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.