Image Courtesy: @TOIchennaiTIOC 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ கூட்டத்தொடர் தொடங்கியது..!

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டுக்கான கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார்.

துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை மேயர் ஆர்.பிரியா துவங்கினார்.

தற்பொது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் வரும் நடப்பு நிதி ஆண்டான 2022-23 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த கணக்குகளை வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சர்பஜெயதாஸ் (வார்டு எண்-41) தாக்கல் செய்கிறார்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த பட்ஜெட் மீதான விவாதமும் இன்று மதியம் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த பட்ஜெட்டில் இடம்பெரும் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவை ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட்டில் சொத்து வரி குறித்த புதிய அறிவிப்புகள், வருவாய் அதிகரித்தல், மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.