தமிழக செய்திகள்

சென்னையில் அதிரடி: கஞ்சா ரவுடி கைது; போலீசாரை தாக்கிய குடும்பத்தினர் மீது வழக்கு!

பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா வேட்டையின் போது 26 வயது பிரபல ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், சோதனையின் போது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய அவனது குடும்பத்தினர் மற்றும் பெண் உறவினர்கள் மீது போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனை

புளியந்தோப்பு காந்தி நகர் 5-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

29 கஞ்சா பொட்டலங்கள்

காவல் துறையின் ரவுடிகள் பட்டியலில் இருக்கும் நந்தகுமார் (26) என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 10 கிராம் எடையுள்ள 29 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 6 ஊசிகளை (Syringes) போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது

அப்போது வீட்டில் இருந்த பெண்கள் சோதனையிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நந்தகுமாரை போலீஸார் கைது செய்து அழைத்து செல்ல முயன்ற போது, அவனது தாய் மற்றும் பெண் உறவினர்கள் காவல் துறையினரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் போலீஸார் லேசான பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது; இந்த தள்ளுமுள்ளு மற்றும் மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தற்கொலை மிரட்டல்

இதையடுத்து கைது செய்யப்பட்ட நந்தகுமார் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், அவனது தாய் மீனா பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தனது மகனை விடுவிக்க கோரி ரகளையில் ஈடுபட்டதுடன், ரேசர் பிளேடால் தனது மணிக்கட்டை கீறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை

மேலும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் போலீஸாரை தாக்கிய குற்றத்திற்காக ரவுடி நந்தகுமாரின் உறவினர்கள் மீது பேசின் பிரிட்ஜ் காவல் துறையினர் தனியாக மற்றொரு வழக்கையும் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.