தமிழக செய்திகள்

ரூ.1,100 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் சென்னை தனியார் நிறுவன இயக்குனர்கள் 4 பேர் கைது

ரூ.1,100 கோடி முறைகேடான பணபரிமாற்றம் செய்த புகாரில், சென்னை தனியார் நிறுவன இயக்குனர்கள் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சென்னை,

சென்னையில் செயல்படும் டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாகவும், கட்டிய பணத்துக்கு நிலம் தருவதாகவும் ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையாக பணம் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில், தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,100 கோடி முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

4 பேர் கைது

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த கம்பெனியின் இயக்குனர்கள் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இதனால் அந்த கம்பெனியின் இயக்குனர்கள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணகுமார் ஆகிய 4 பேருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் அந்த 4 பேரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT