சென்னை,
குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாவட்டம் மாதவரம் அருகே தணிக்காச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). இவர் தனது புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கழிவு நீரகற்று வாரியத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தார். அப்பகுதியில் குடிநீர் இணைப்பு உதவிப் பொறியாளராக முருகேசன் என்பவர் பணியாற்றி வந்தார். விண்ணப்பத்தை பார்த்து, இந்த வேலையை செய்வதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார்.
அரசு நிர்ணயித்த தொகையை விட, தனியாக லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெயக்குமார், இதனை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவகத்திற்கு சென்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவிப் பொறியாளரை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து முருகேசனிடம் வழங்கும்படி கூறினர்.
அந்த பணத்தை ஜெயக்குமார் எடுத்து சென்று அலுவலகத்தில் இருந்த முருகேசனிடம் வழங்கினார். அதை பெற்றவுடன், அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர், அவரது கைகளில் ரசாயன சோதனை நடத்தியபோது லஞ்சம் பெற்றது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.