கைது செய்யப்பட்ட சந்தோஷினி 
தமிழக செய்திகள்

சென்னை: ஐபோன்களை திருடிய பட்டதாரி பெண் கைது

போலீசாரின் தொடர் விசாரணையில் சந்தோஷினி மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது.

சென்னை,

சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்களை திருடிய பட்டதாரி பெண் ஒருவரை சென்னை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

விடுதியில் தொடர் திருட்டு

சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவிகள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்கள் அடுத்தடுத்து மாயமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு தங்கியிருந்த பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, வேலை தேடி வந்த ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பட்டதாரி பெண் சிக்கினார்

அந்தப் பெண்ணைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் ஐபோன்களை திருடினார் என்பது உறுதியானது. விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த சந்தோஷினி (வயது 26) என்பதும், பி.காம் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட சந்தோஷினி, அதற்கு பணம் தேவைப்பட்டதால் விடுதி தோழிகளின் கவனத்தைத் திசை திருப்பி ஐபோன்களை திருடினார். திருடிய போன்களை விற்று ஆடம்பரமாக செலவு செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

பழைய குற்றம்- கைது

போலீசாரின் தொடர் விசாரணையில் சந்தோஷினி மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பது தெரியவந்தது. சென்னையில் தங்கியிருந்தபோது தனது உறவினர் ஒருவரைத் தாக்கிய வழக்கில் இவர் ஏற்கனவே சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தோஷினியிடம் இருந்து விலை உயர்ந்த ஐபோன்களை மீட்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.