சென்னை,
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா செயல்பட்டு வருகிறார். துணை மேயராக மகேஷ்குமார் செயல்பட்டு வருகிறார்.
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் 43 பேர் மட்டுமே பதவியேற்ற 90 நாட்களில் தங்களது சொத்துகள், கடன்கள் குறித்த அறிக்கையை மாநகராட்சியில் சமர்ப்பித்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல் கிடைத்துள்ளது.
அதில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட 157 பேர் இதுவரை தங்கள் சொந்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மாநகராட்சி விதிகளின் அடிப்படையில் மேயர், துணை மேயர் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள், குத்தகை, கடன்கள், அடமானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் முடிந்த 90 நாட்களில் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட 157 கவுன்சிலர்கள் இதுவரை தங்கள் சொந்து விவரங்களை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநில சட்டப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவில் இந்த விவரத்தை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் சென்னை மேயராக பிரியா தேர்வானார். 5 ஆண்டுகள் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் இன்னும் 8 மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பதவிகாலம் நிறைவடைய இன்னும் 8 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சென்னை மேயர் பிரியா உள்பட ஏராளமான கவுன்சிலர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.