துணை ஆணையர் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி: குப்பைகளை தரம் பிரிக்க 40 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சென்னை ,

"குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் கலந்துகொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

குப்பம் கடற்கரை சாலை

சென்னை மாநகராட்சியின் சார்பில், பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்ட "குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்" என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல்,அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவுகளை மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மக்களிடையே விழிப்புணர்வு

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையைப் பிரிப்போம் - நாளையை காப்போம்” என்ற 40 நாள் வீடுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 22.08.2026 அன்று தெற்கு வட்டாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழிப்புணர்வு

அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், இன்று பங்கேற்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

50,000 வீடுகள்

இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தென் சென்னை மண்டலங்களான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 50,000 வீடுகளை சென்றடையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 10,000 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கலந்துரையாடல் கூட்டம்

பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிகழ்வில், அடையாறு மண்டல அலுவலர் காளிதாஸ், செயற்பொறியாளர் ரங்கநாதன், மற்றும் மாநகராட்சி, உர்பேசர் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.