சென்னை,
மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (23.07.2026) வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-16க்குட்பட்ட கடப்பாக்கம் ஏரி, வார்டு-19க்குட்பட்ட மஞ்சம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நிவாரண மையம், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம், மாத்தூர் பகுதியில் நர்சரி பண்ணைகள் அமைக்கப்படவுள்ள இடம், தொடர்ந்து, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள சமுதாய கூடம், வார்டு-24க்குட்பட்ட நகர்ப்புற சமுதாய நல மையம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கடப்பாக்கம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும், நிவாரண மையம் கட்டுமானப் பணிகளையும், சமையல் கூடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சமுதாய கூடத்தினை பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.