தமிழக செய்திகள்

சென்னை: ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு- 4 பேர் கைது

சென்னையில் ரவுடி ஒருவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சென்னை,

சென்னை வானகரத்தில் ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெட்ரோல் குண்டுகள் வீச்சு

சென்னை வானகரம் அடுத்த துண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜி (வயது 26). ரவுடியான இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. வானகரம் காவல் நிலையத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2 பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட 2 பாட்டில்களில் தீ வைத்து, ராஜ்குமார் வீட்டின் வாசலில் அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

2 பெட்ரோல் குண்டுகளும் பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. வெடிச்சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வானகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முன்விரோதம்

இதுதொடர்பாக வானகரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், மற்றொரு தரப்பினரும் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை அச்சுறுத்தும் நோக்கில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வானகரம் போலீசார் விசாரித்து வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜீவா(20), ராகுல்(21), கோகுல்(23) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.