சென்னை,
தேர்வு முடிவுகளில் 2 பாடங்களில் தோல்வி அடைந்த மனவருத்தத்தில், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனகலா சுப்பா ரெட்டி. இவரது மகன் முனகலா நிகில் ரெட்டி (வயது 27). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு (எம்.எஸ்.) இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், நிகில் ரெட்டி சமீபத்தில் எழுதிய மருத்துவ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவர் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே நிகில் ரெட்டி கடும் மன உளைச்சலிலும், வருத்தத்திலும் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து நேற்று இரவு தனது நண்பர்களிடமும் அவர் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
அதற்கு அவரது நண்பர்கள், "இந்த ஆண்டு உன்னைப்போல 8 பேர் தோல்வி அடைந்துள்ளனர், இதற்குப் போய் கவலைப்படலாமா? அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அவருக்கு ஆறுதல் படுத்தியுள்ளனர். பின்னர் அனைவரும் அறையில் தூங்க சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் நிகில் ரெட்டி, தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியின் பால்கனிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிகில் ரெட்டி தரையில் விழுந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், மாணவர் நிகில் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.