தமிழக செய்திகள்

சென்னை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலி

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பெரியக்குப்பம் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

சென்னை,

சென்னை எண்ணூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 மாணவர்கள்

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பெரிய காசி கோவில் குப்பம் முதல் தெருவைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கவுதம் (வயது 15). இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஜோதிஷ்(15). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராட்சத அலையில் சிக்கிய மாணவர்கள்

நேற்று மாலை நண்பர்கள் இருவரும் எண்ணூர் பெரியக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி 2 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

பிளஸ்-1 மாணவர் பலி

இதைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக கடலுக்குள் சென்று, அலையில் சிக்கித் தத்தளித்த 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, கவுதம் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு மாணவர் ஜோதிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.