சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலையில் இயங்கி வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, வாடிக்கையாளர்களின் அசல் தங்க நகைகளை எடுத்து கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து 3.15 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர் வங்கியின் ஊழியர்கள்.
வங்கிக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கணேஷ் சந்திரபாண்டா என்பவர் புதிய முதன்மை மேலாளராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே வாடிக்கையாளர் ஒருவரின் நகை பாக்கெட் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்த மேலாளர். உடனே வங்கியின் தூய்மை பணி உதவியாளர் புருஷோத்தமன் நகை பெட்டி லாக்கருக்கு அடியில கிடந்துச்சு என்று எடுத்து கொடுத்துள்ளார்.
இதில் மேலாளருக்கு சந்தேகம் வர, வங்கியின் கட்டுப்பாட்டு அலுவலக அனுமதி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் குமார் மூலமாக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த அனைத்து அடகு நகைகளையும்ஆராய்ந்து மறு ஆய்வு செய்தனர்.
வாங்கியில் நடைபெற்ற இந்த தணிக்கையில் தான் மொத்தமும் வெளிவந்தது. பல்வேறு வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 24 தங்க நகை கடன் கணக்குகளில் இருந்த அசல் தங்க நகைகள் அனைத்தும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்குப்படி 2,137.800 கிராம் தங்கம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 1,919 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த கூட்டு சதியில் வங்கியின் முன்னாள் மூத்த கிளை மேலாளர் சரவண பாபு, அலுவலக உதவியாளர் புருஷோத்தமன், மற்றும் பாதுகாப்பு பெட்டக சாவி பொறுப்பாளர்கள் என 4 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
திருடப்பட்ட அசல் தங்க நகைகளை மீட்கவும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.