கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை: புதிய டபுள்டெக்கர் பஸ்கள் இயக்க இருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஆய்வு

மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் 20 புதிய டபுள்டெக்கர் பஸ்களை இயக்கும் வகையில் உத்தேச வழித்தடங்களை தேர்வு செய்து மாநகர போக்குவரத்து கழகம் ஆய்வு செய்துள்ளது.

1970ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பஸ்கள், சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பஸ் தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டக்கர் பஸ்கள் கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் டபுள் டெக்கர் பஸ் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஒ.எச்.எம்., குளோபல், ஈகிள் கன்ஸ்ட்ரக்ஷன் கோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.

ஒப்பந்ததாரரை தேர்வு செய்து 20 டபுள்டெக்கர் பஸ்கள் அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

கடற்கரை - கோவளம், கோயம்பேடு அண்ணாசதுக்கம், சுங்கச்சாவடி - கலங்கரை விளக்கம், பிராட்வே - டி.எம்.எஸ். அல்லது கிண்டி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இரண்டு வழித்தடங்களையும் உத்தேசமாக தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இறுதிகட்ட ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.