மதுரை,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், கடந்த 11-ந்தேதி காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சுற்றுலா பயணிகளை பேஸ்புக் (முகநூல்) மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வந்த, ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சுற்றுலா அலுவலக உரிமையாளர் பிரபு (வயது 30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைத்து அனுப்பியதாக கூறப்படும், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்டை பிடிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக இருக்கும் அவருக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பீட்டர் வான் கெய்ட் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மனு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரை கைது செய்ய ஏப்.12 வரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.