தமிழக செய்திகள்

சென்னை: ரெயிலில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது

சென்னையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் புவனேஸ்வர்-புதுச்சேரி விரைவு ரெயிலில் சோதனை செய்தபோது மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர சோதனை செய்தனர். அப்போது அயோத்தியா காண்ட் ராமேசுவரம் விரைவு ரெயிலில் வந்த ஒரு பயணியிடம் இருந்து 15 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். அந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் புவனேஸ்வர்-புதுச்சேரி விரைவு ரெயிலில் சோதனை செய்தபோது, பெண் பயணி ஒருவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில் அவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த மோகனா (வயது 25) என்பது தெரியவந்தது. பீகாரில் இருந்து அவர் கஞ்சா கடத்தி வந்தது அம்பலமானது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்த கஞ்சா பார்சல்களையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

அதே ரெயிலின் மற்றொரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையைச் சோதனை செய்தபோது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரெயிலில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.