தமிழக செய்திகள்

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு: சென்னை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை- 8 பேர் கைது

கோவை அசோக்நகர் பகுதி வீதிகளில் பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில் சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கோவை,

கோவையில் பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில் சென்னை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டதாரி வாலிபர்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (வயது 24). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தார். படித்து முடித்ததும் சென்னை சென்று விட்டார். அவ்வப்போது கோவை வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அவர் உடையாம்பாளையத்தில் உள்ள அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று தங்கி இருந்தபடி கோவையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடி வந்தார். நவீனின் நண்பர்கள் பைக்கில் அந்தப்பகுதியில் உள்ள வீதிகளில் வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு

அதன்படி நேற்று முன்தினம் நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். உடனே அந்தப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்(20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கியதுடன் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த 2 பேரும் நவீனிடம் சென்று நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் சந்தோஷ் தனியாக அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அதை நவீன் மற்றும் நண்பர்கள் பார்த்ததுடன், அவரை தங்களுடைய அறைக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விக்னேஷ்(26) உள்பட 9 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 9 பேரும் சேர்ந்து நவீன் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையில் நவீன் உள்பட 5 பேர் இருந்தனர். அந்த 9 பேரும் சேர்ந்து நவீன் மற்றும் அவருடைய நண்பர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து நவீனின் நெஞ்சில் குத்திவிட்டு தப்பி ஓடினர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நவீன், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

8 பேர் கைது

இதையடுத்து போலீசார் சந்தோஷ், விக்னேஷ் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தலைமறைவாக உள்ள நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.