விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.688.48 கோடி செலவிலான 199 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,879 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.2.2026) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 390 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவிலான 199 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 254 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 13,879 பயனாளிகளுக்கு 43 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 49 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள், வட்டார பொது சுகாதார கட்டிடங்கள், புதிய நியாய விலைக் கடைகள், இருப்பறையுடன் கூடிய சமையல் அறைகள், நாடக மேடைகள், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிக் கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கணினி வகுப்பறைகள், உணவு தானியக் கிடங்குகள், சாலையை வலுப்படுத்தும் பணிகள், வட்டார சுகாதார வள மையக் கட்டிடம் உள்ளிட்ட 163 முடிவுற்றப் பணிகள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திண்டிவனம் நகராட்சி, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 27 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம்;
பி.என்.தோப்பு, காகுப்பம், சாலாமேடு ஆகிய இடங்களில் உள்ள நடுநலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள்; கோட்டக்குப்பம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் நான்கு கூடுதல் வகுப்பறைகள்,
ரஹமத் நகரில் 32 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா, செஞ்சி, அரகண்டநல்லூர், வளவனுர் ஆகிய பேரூராட்சிகளில் 57 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள், செஞ்சி பேரூராட்சி – சக்கராபுரம் இறக்கம் 2 மற்றும் 3, பெரியண்ணன் தெருவிலிருந்து பி.ஏரி வழித்தடம் ஆகிய இடங்களில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் பாலங்கள்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கோலியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 44 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் 12 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடம், மரகதபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள், கண்டமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 76 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் 16 வகுப்பறைகள், கோவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 8 வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள்;
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், வெள்ளிமேடுபேட்டை பாண்டி (வழி) மைலம் சாலையில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட நான்கு வழித்தடம் மற்றும் கல்வெர்ட், மையத்தடுப்பான், மேம்படுத்தப்பட்ட சந்திப்பு, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், கொங்கராயனூர் – பையூர் காலனி சாலையில் தென்பெண்ணை ஆறு, சாத்தனூர் – ஆசூர் – மேலகொந்தை சாலை, வளத்தி-அவலுர்பேட்டை சாலைகள் ஆகிய இடங்களில் 38 கோடியே 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் தலைமை மருத்துவமனைக் கட்டிடம் மற்றும் 6 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவு, செஞ்சி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவு;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், விக்கிரவாண்டியில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் மற்றும் 75 லட்சம் ரூபாய் செலவில் உழவர் சந்தை;
கூட்டுறவுத் துறை சார்பில், திண்டிவனம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் எண்ணெய் உற்பத்தி அலகுகள், 15 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட வளவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அனுமந்தை மற்றும் அரகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 70 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டிடங்கள், காணை மற்றும் நேமூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 65 லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு சேவை மையக் கட்டிடங்கள்;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனம் சிட்கோ மருந்தியல் பெருங்குழுமத்தில் 87 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள்;
என மொத்தம், 390 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 199 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஆத்திபாக்கம் ஊராட்சியில் மதுரா நெடுந்தோண்டி பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 300 மீட்டர் பைப் லைன் அமைக்கும் பணிகள், ஏவலூர் ஊராட்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு பம்பு அறை, மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிகள், செம்பாக்கம் ஊராட்சியில் காலனி பகுதியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மெயின் பைப் லைன் அமைக்கும் பணிகள், வடபுத்தூர் ஊராட்சியில் 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம். செங்கமேடு முதல் அய்யூர் அகரம் சாலை வரை 2 கோடியே 26 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விழுப்புரம் மாவட்டம் - அன்னியூர், பனமலை (சமத்துவபுரம்) மற்றும் 10 ஊராட்சிகளைச் சார்ந்த 29 ஊரக குடியிருப்புகளுக்கு 33 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்;
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில், வானூர் – சின்ன முதலியார்சாவடி மீனவ கிராமத்தில் 11 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம்;
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பனங்குப்பம் அரசு அருங்காட்சியத்திற்கு 6 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், 3 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீரபாண்டி கிளை நூலகக் கட்டிடம், செஞ்சி முழு நேர கிளை நூலகக் கட்டிடம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள்;
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், பொம்மையார் பாளையத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய அரங்கம்;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், நாயனூர் புதிய சிட்கோ தொழிற்பேட்டையில் 5 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளும் பணிகள்;
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், செஞ்சி – மேல்கலவாய் சாலை சங்கராபரணி ஆறு, மைலம்-பாண்டி சாலை, விழுப்புரம் – மாம்பழப்பட்டு – திருக்கோயிலூர் சாலை முதல் பொன்னங்குப்பம் – பள்ளியந்தூர் காங்கேயனூர் சாலை, வெள்ளிமேடுபேட்டை- பாண்டி (வழி) மைலம் சாலை ஆகிய இடங்களில் 124 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள், இருவழித் தடத்தை நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல், சிறு பாலம், மையத்தடுப்பான், சந்திப்பு மேம்படுத்தும் பணிகள், தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள்;
நீர்வளத் துறை சார்பில், 38 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடூர் அணையின் கதவுகள், கசிவு பாதைக்கு செங்குத்து கதவுகள் அமைத்தல், கூடுதல் கதவுகளில் உள்ள ரேடியல் கதவுகளை சரி செய்தல் மற்றும் புதுப்பித்தல், அவசர கால கதவு மற்றும் வீடூர் கால்வாய் தலைப்பு மதகு இயக்க முறைகளை மாற்றி அமைக்கும் பணிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், செஞ்சி மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்குகள் அமைக்கும் பணிகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மரக்காணம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் 19 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையக் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள்;
என மொத்தம், 254 கோடியே 29 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத் திட்ட உதவிகள்:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 4,559 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 7,809 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதிய திட்டம், திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்து நிவாரணத் தொகை, தற்காலிக இயலாமை உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள்;
வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 219 பயனாளிகளுக்கு பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம், பவர் டில்லர், பவர் வீடர், ரோட்டாவேட்டர், வைக்கோல் கட்டும் கருவி, நெல் நடவு இயந்திரம் போன்ற கருவிகள் வழங்குதல்;
மாவட்ட தொழில் மையம் சார்பில், 41 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 2 பயனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்ததின் கீழ் வீடுகள்;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 101 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் எல்.பி.ஜி. சலவைப் பெட்டிகள் வழங்குதல்;
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 157 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார அதிகாரமளித்து வளம் உண்டாக்க தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம், தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை போன்றவற்றின் கீழ் உதவிகள்;
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 159 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 245 பயனாளிகளுக்கு விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள்;
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 583 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர மிதிவண்டி, வங்கிக் கடன், சிறப்பு சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, பராமரிப்பு உதவித் தொகை, கைப்பேசி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி போன்ற பல்வேறு உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 43 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 13,879 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.