சென்னை,
சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் (15.7.2023) நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2017-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றத்திலிருந்தும், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகும், தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து, அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நாளை (15.7.2023) சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.