தமிழக செய்திகள்

தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

2022 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா அச்சம் நீங்கி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், இந்த ஆண்டு சிறப்பாக அமையவும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022 ஆம் ஆண்டு நன்றாக அமைய வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா நோய்த்தொற்றின் முதல் மற்றும் 2-ம் அலையில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோம்.

அதிலும் குறிப்பாக 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான், உங்கள் முதல்-அமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். 2-வது அலையை கட்டுப்படுத்துவது தான் எனது முதல் வேலையாக இருந்தது. என்னுடன் அமைச்சர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதை மறக்கவே முடியாது.

அதன் மூலம் குறைந்த கால அளவிலேயே 2-வது அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொதுமக்களாகிய உங்கள் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்திய போது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்ட உங்களது ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கொரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது.

அதே மாதிரியான ஒரு ஒத்துழைப்பைத் தான் இந்த புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன். கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதன் வேகம் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு, தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வருபவர்களுக்கான பரிசோதனை, நம் மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கிறது. கூடுதல் தேவையை யோசித்தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். அதனால் நீங்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவைப்படுகிறது.

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான். அந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள். COVID Appropriate Behaviour என்ற கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். அவசரத் தேவைகள், அன்றாடப் பணிகளுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியை கடைபிடியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாக கையை கழுவுங்கள். முகக்கவசத்தை கட்டாயம் பொதுவெளியில் போட்டுக்கொள்ளுங்கள். அதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உங்களை சார்ந்திருக்ககூடிய அனைவருடைய பாதுகாப்பிற்காகத்தான்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் டோஸ் போட்டவர்கள், உங்களுக்கு சொல்லப்பட்ட தேதியில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளுங்கள்.

ஜனவரி மாதத்தில் இருந்து ஒன்றிய அரசு, 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தும். உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறார்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுக்கொண்டு வாருங்கள். தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், ஒமைக்ரான் நோய்த் தொற்று ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

அதனால் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனே கண்டிப்பாக போட்டுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் உங்களுடைய முதலமைச்சரான எனக்கு மிகவும் முக்கியம். அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும், மிகுந்த பணிவோடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதுடன், புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து