தமிழக செய்திகள்

நல்லக்கண்ணு உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

நல்லக்கண்ணுவின் உடல் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.55 மணிக்கு சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது நல்லக்கண்ணுவின் உடல் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “நல்லக்கண்ணு மறைவு பொது வாழ்வில் உளவர்களுக்கு வருத்தப்படக் கூடிய செய்தி. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும், அரசியலில் ஈடுபடுவோருக்கும் ஒரு பாடமாக வாழ்ந்தவர் தோழர் நல்லக்கண்ணு” என்று தெரிவித்தார்.