தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 4ஆம் தேதி சிவகங்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 4-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் டிசம்பர் 4-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதனிடையே மதுரையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.