தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்-அமைச்சர் கொச்சைப்படுத்தி பேசினார்: எ.வ.வேலு குற்றச்சாட்டு

சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சென்னை,

சட்டசபையில் திமுக குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்தும், மிசா குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். ஆனால், விதிகளுக்கு முரணாக முதல்-அமைச்சர் பேசியதாகவும், அதனை அவைக்குறிப்பில் இருந்துநீக்குமாறும் திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனால் திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் திமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எ.வ.வேலு பேசியதாவது;

”எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது அதைப்பற்றி சட்டசபையில் பேசக்கூடாது. ஆனால் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபை விதிக்கு முரணாக, அமலாக்கத்துறை வழக்கு பற்றியும், மிசாவை பற்றியும் பேசினார். சர்க்காரியா கமிஷன் குறித்து பேசினார். அமலாக்கத்துறை அறிக்கையை படித்த முதல்-அமைச்சர், மிசாவை பற்றி பேசும்போது பாடி லாங்குவேஜ் செய்தார். மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி முதல்-அமைச்சர் பேசினார்.

இதனால் முதல்-அமைச்சர் பேசியதை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரினோம். ஆனால் அதனை சபாநாயகர் மறுத்துவிட்டார். அத்துடன், அவைக்காவலர்களை வரவழைத்து எங்களை வெளியே தள்ளியுள்ளனர். சபாநாயகர் இதுவரை நடுநிலையோடு இருந்தார். ஆனால் அவர் இன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. திமுக நடத்தியது ரியல் ஆட்சி. இப்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சி.”

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT