தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் - பிரேமலதா பேட்டி

மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம் என பிரேமலதா கூறினார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார்.

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றிபெற வைத்த விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் நன்றிகள். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன். விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன்.

முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய அவகாசம் கொடுப்போம். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம். ”

இவ்வாறு அவர் கூறினார்.