சென்னை,
லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
உலகளாவிய முதலீட்டாளர்களை சந்திக்கவும், முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் விஜய், செப். 16ம் தேதிவரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த சூழலில், நாளை மறுநாள் (செப். 11) மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை முதல்-அமைச்சர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்க உள்ள அஜித்குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித் குமார்,“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை (LE MANS CUP) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட உள்ளார் முதல்-அமைச்சர் விஜய்.