தமிழக செய்திகள்

மாணவர்களுடன் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதையை சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

போதைப் பொருள் இல்லாத தமிழகம்

போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில், போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதையை சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.

மாணவர்களுடன் உறுதிமொழி

பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் பார்த்தார்.

பின்னர் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் துவக்கி வைத்து மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 'நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்'... போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்..' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

தொடர்ந்து மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு முதல்-அமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மாரத்தான் ஓட்டம்

சென்னையில் கடந்த ஜூன் 26-ந்தேதி நடந்த சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட் டத்தை, மெரினா கடற்கரையில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.