சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த 15 முதல்வர் படைப்பகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியால் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதை சிறப்பாக நடத்துவதற்காக, இப்படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளர்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.