தமிழக செய்திகள்

11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம், 

வைகாசி மாத பிறந்ததையொட்டி ராமநாதபுரம் மாவட் டத்தில் இந்த மாதம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கடைசி முகூர்த்தம் என்பதால் கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும் திருமணங்கள் அதிக அளவில் நடந்தன.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற திருமணங்களின் போது கிடைத்த தகவல் மற்றும் நேரடி விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், போலீசார் ஆகியோர் இணைந்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த திருமணங்களை தடுத்து நிறுத்தியதோடு சம்பந்தப் பட்ட குழந்தைகளை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகாசி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் கடந்த 2 நாட்களில் நடைபெறவிருந்த 11 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT