வாணியம்பாடி
சின்னவேப்பம்பட்டு, கலந்திரா ஆகிய ஊராட்சிகளில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சின்னவேப்பம்பட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.86 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் கட்டுமான பணி நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். பின்னர் கலந்திராவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தததோடு 100 நாள் வேலை பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமின்றி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலந்திரா ஊராட்சியில் அறிவழகன் என்ற விவசாயி 2 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை விதை பண்ணை அமைத்துள்ளார். அதனையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.