தமிழக செய்திகள்

சோழர் கால தாமிர செப்பேடுகள்.. தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - ஜோதிமணி எம்.பி.

ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து ஒப்படைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தொடர் முயற்சி பலனளித்திருக்கிறது.

பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழ்நாட்டின்,சோழப்பேரரசின் பல்வேறு மத நம்பிக்கைகளை மதிக்கும் தன்மைக்குச் சான்றாக உள்ள இச்செப்பேடுகள் தமிழ்நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. மத்திய அரசு இதை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு இதைப்பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த போற்றுதலுக்குரிய வரலாற்று ஆவணமான செப்பேடுகள் சொல்லும் செய்தியான மத சகிப்புத்தன்மையை பிரதமர் மோடியும்,பாஜகவும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.