தமிழக செய்திகள்

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு

சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு கருப்பையா வெற்றி பெற்றார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்தது.

இதையடுத்து த.வெ.க. ஆட்சி அமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். அதன்படி தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்று இருக்கிறார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக(Pro-tem Speaker) கருப்பையா இன்று பதவியேற்றுள்ளார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கருப்பையாவுக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தற்காலிக சபாநாயகர் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு சபாநாயகர் தேர்வு நடைபெறும். தற்போது தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுள்ள கருப்பையா, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் த.வெ.க.வில் இணைந்த கருப்பையா, 2026 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான்(தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.