தமிழக செய்திகள்

கோவில் கொடைவிழாவில் தகராறு: வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

கோவில் கொடைவிழாவில் வாலிபர் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

களக்காடு,

களக்காடு அருகே நேற்று இரவு வாலிபரை சரமாரி வெட்டிக்கொலை செய்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ தேவநல்லூரை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் மகன் ரமேஷ் ராம் (வயது 33). விவசாயி. நேற்று இரவு இவர் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.

கொலை

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேஷ் ராமை சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரமேஷ் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மகும்பலுக்கு வலைவீச்சு

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் கொடைவிழாவில் ரமேஷ் ராம் தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரமேஷ்ராம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT