ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை - அம்மு தம்பதியரின் மூத்த மகள் யாமினி. 12-ஆம் வகுப்பு படித்து வந்த யாமினி, கைவிடப்பட்ட கல் குவாரி குட்டைக்கு துணி துவைக்க சென்றார்.
குளத்தில் இறங்கிய மாணவிக்கு தண்ணீரின் ஆழம் தெரியாததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். மாணவி நீரில் மூழ்கியவுடன் அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். அந்த பகுதியில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. தீயணைப்பு துறைக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவியை சடலமாக மீட்டனர். மாணவியின் உடல் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.