மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரைபுதுச்சேரி கிராமத்தை சந்தியா, மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை சந்தியா சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வருத்தம் அடைந்த அவர், இன்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னர், தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாணவி சந்தியா தேர்ச்சி பெற்றாரா? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர். இதில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 191 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்குமுன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்த சம்பவம் அவரது தோழிகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.