வில்லியனூரில் துணிக்கடை, திருமண நிலையத்தில் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
துணிக்கடையில் திருட்டு
வில்லியனூர் மேலண்டை வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது52). இவர் விழுப்புரம் பழைய மெயின்ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். ஸ்ரீதரன் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 7.30 மணிக்கு வழக்கம்போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
வலைவீச்சு
வில்லியனூர் தருமாபுரியை சேர்ந்தவர் சிவக்குமார் (49). இவர் விழுப்புரம்-புதுச்சேரி மெயின்ரோட்டில் தனியார் திருமண நிலையத்தில் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று சிவக்குமார் திருமண நிலையத்தை பூட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்தபோது திருமண நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலக அறையில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.