பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.8.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.8.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.2.2025) தலைமை செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 6 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் சிங்கவனம் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் பிரிவு பல்நோக்குக்கூடம் மற்றும் சுகாதாரத் தொகுதிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
நபார்டு வங்கி நிதி உதவியுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி - அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் 2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவிலும், பூசலபுரம் - அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 83 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும், தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரம் - அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிலும், இராஜதானி - அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 97 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடம் மற்றும் 47 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகக் கட்டிடம்; சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 96 லட்சம் ரூபாய் செலவில் ஆயுஷ்பிரிவு பல்நோக்குக்கூடம், மருத்துவ உபகரணங்கள், சுகாதாரத் தொகுதி கட்டிடம் என 2 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சா.விஜயராஜ் குமார், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா.சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.