Image Credits : AI 
தமிழக செய்திகள்

தேங்காய் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரிப்பு: ரூ.7,038 கோடியை எட்டிய வர்த்தகம்

தேங்காய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொச்சி,

கடந்த நிதியாண்டில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 62 சதவீதம் அதிகரித்து, ரூ.7,038 கோடியை எட்டியுள்ளதாக தென்னை வளர்ச்சி வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென்னை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் தேங்காய் சிரட்டைக்கரி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,688.89 கோடி மதிப்பிலான தேங்காய் சிரட்டைக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கயிறு உள்ளிட்ட பொருட்களைத் தவிர்த்து, தேங்காய் சார்ந்த பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் தேங்காய் சிரட்டைக்கரியின் பங்கு 67 சதவீதமாக உள்ளது. இதன் ஏற்றுமதி அளவு 1.80 லட்சம் டன்னாகும். தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான சர்வதேச தேவை அதிகரிப்பு, பதப்படுத்தும் திறன் மேம்பாடு, பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேங்காய் ஏற்றுமதியின் முக்கியத்துவம்

தேங்காய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய், சிரட்டைக்கரி, நார், கயிறு, தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளில் வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. சர்வதேச சந்தையில் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான பொருட்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT