தமிழக செய்திகள்

கோவை: முதியவர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு

ஹரிராவ் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு போய்விட்டார்.

கோவை,

கோவை ரத்தினபுரி, பாலுசாமி நகரை சேர்ந்தவர் ஹரிராவ் (வயது60). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு போய்விட்டார். மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து ஹரிராவ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.