தமிழக செய்திகள்

கோவை பில்லூர் அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு நேற்று 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்தது.

கோவை,

பில்லூர் அணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது, நீலகிரி மாவட்டம், அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளத்தில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி.

கேரளம், நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 95.50 அடியாக உயர்ந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் 4 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் மீன்பிடிக்கவோ துணி துவைக்கவும், குளிக்கவும் யாரும் இறங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.