தமிழக செய்திகள்

கோவை சிறுமி விவகாரம்: குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்று தருவதில் பாஜக உறுதியாக இருக்கும் - எல்.முருகன்

குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டேன் என எல்.முருகன் தெரிவித்தார்.

சேலம்,

பா.ஜ.க. மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கடந்த இரண்டு நாட்கள் முன்பு, கோவை மாவட்டம் சூலூரில் சமூக விரோதிகள் இருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான, சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூரில் அவரது இல்லத்திற்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரனுடன் சென்று, குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டேன்.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை பெற்று தருவதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியோடு இருக்கும் என்று குழந்தையின் பெற்றோர்களிடம் தெரிவித்தோம்.

இந்நிகழ்வில், சேலம் மாவட்ட தலைவர் ஹரிராமன் , சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.