தமிழக செய்திகள்

கோவை சிறுமி கொலை: கைதானவருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சிறுமியை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசியுள்ளனர்.

கோவை,

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திவீர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்று இரவு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.

அதேவேளை, சிறுமியை கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச்சென்ற சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் கார்த்திக் தப்பியோட முயன்றபோது கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் கைதான மோகன் ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மோகன் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.