தமிழக செய்திகள்

கோவை: மதுக்கரை சீரபாளையத்தில் ஆலங்கட்டி மழை

ஊட்டி, கோவை, மருதமலை பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

கோவை,

தமிழ்நாட்டில் மார்ச் முதல் வெயில் அதிகரித்து வருகிறது. கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏப்ரல், மே மாதத்தில் இருக்கும் நிலை, தற்போதே இருக்கிறது என்று கூறுகின்றனர். இந்த நிலையில், நேற்று கோயம்புத்தூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனைத்தொடர்ந்து, ஊட்டி, கோவை, மருதமலை பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஊட்டியில் இன்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மதுக்கரை சீரபாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, 100 டிகிரிக்கும் மேல், வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று பிற்பகலில் வாணியம்பாடி மற்றும் புத்துக்கோவில், நெக்குந்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள், சூழ்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, ஆலங்கட்டியுடன் கூடிய, கனமழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் ஆலங்கட்டி கனமழை, வெயிலால் வாடிய மக்கள் தற்போது இதமான சூழலை அனுபவித்து வருகின்றனர்.