கன்னியாகுமரி,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் (MCMC) மற்றும் சி-விஜில் (cVIGIL) புகார் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். இந்த கட்டுப்பாட்டு அறையானது 24 மணி நேரமும் தடையின்றி செயல்பட்டு வருவதோடு, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த ஆய்வின் போது சி-விஜில் செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அவற்றை சம்பந்தப்பட்ட பறக்கும் படைகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் கட்டணச் செய்திகள் மற்றும் அனுமதியற்ற விளம்பரங்களைக் கண்காணிக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் அழகுமீனா, "தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் 1800-599-8010 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம்" என்று தெரிவித்தார்.