தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் சாட்சியம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

கோவை,

கோவை விமான நிலையம் அருகே காட்டு பகுதியில் கடந்த ஆண்டு நவம் பர் 2-ந் தேதி, ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சதீஷ், அவருடைய சகோதரர் காளீஸ்வரன் மற்றும் உறவினர் தவசி ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இதுதவிர இந்த வழக்கில் அறிவியல் பூர்வ பரிசோதனை செய்த அதிகாரி, தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்பட 4 பேர் காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளித்தனர். நேற்று மொத்தம் 6 பேர் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் விசாரணை இன்றும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.