தமிழக செய்திகள்

வணிக சிலிண்டர் ஒரே நாளில் ரூ. 993 உயர்வு - செல்வப்பெருந்தகை கண்டனம்

மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நாட்டின் பொருளாதார நிலையை சீராக்குவதிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய அரசு விலை அதிகரிப்பு, வேலைவாய்ப்பு குறைவு போன்ற அடிப்படை பிரச்சினைகளில் சரியான தீர்வுகளை வழங்காமல், நடுத்தர மற்றும் சாமான்ய மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் முடிவுகள் எடுக்கின்றது.

இன்று வணிக எரிவாயு சிலிண்டர் மற்றும் 5 கிலோ சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒரே நாளில் ரூ 993 மற்றும் ரூ 261 உயர்த்தியிருப்பதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. இதன் விளைவாக, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், உணவகங்கள், தெரு வியாபாரிகள் ஆகியோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் பொதுமக்களின் உணவுப் பொருட்களின் விலையிலும் நேரடியாக பிரதிபலிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே, மத்திய அரசு உடனடியாக தனது தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டியது அவசியம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.