சென்னை,
அடையாறு மண்டலத்தில் சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், திருவான்மியூர், காந்திகிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (17.09.2026) பார்வையிட்டு, பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கான காலை உணவு செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் என்.காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.