சென்னை,
ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி முகம்மது ஷகீல் அக்தரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்களை (4 பேர்) தேர்வு செய்வதற்கு தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சுடலைக்கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழு, மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.